ஊத்தங்கரையில் தீரன் தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அரசு போக்குவரத்து பணிமனை முன் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலர் ஜி.வஜ்ஜிரவேல் தலைமை வகித்தார். போக்குவரத்து சங்க மாநிலத் தலைவர் ஜெகநாதன், மாநில செயலர் கார்த்திகேயன், மாநில பொருளாளர் எம். கார்த்திகேயன், மாநில துணைச் செயலர் எஸ்.பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர் ஈ .ஆர்.ஈஸ்வரன் கலந்துகொண்டு கட்சிக் கொடி ஏற்றி, போக்குவரத்துப் பணிமனை பெயர்ப் பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அதில், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கங்கள் அரசியல் சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே உரிமையை நிலை நாட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
வெளிநாடு சென்று வந்துள்ள முதல்வர், ஊடகங்களை அழைத்து தமிழகத்துக்கு என்னென்ன முதலீடுகள் வரப்போகின்றன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். ஜவுளி தொழிற்சாலை, லாரி தொழிற்சாலைகள் முடங்கிக்கொண்டிருக்கின்றன என்றார்.
நிகழ்ச்சியில், மாநில கொள்கை பரப்பு செயலர் அசோகன், கிளைச் செயலர் பெருமாள்செல்வன், தருமபுரி மாவட்டச் செயலர் கே.செந்தில் முருகன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, கிளை தலைவர் முரளி வரவேற்றார். விஜயகுமார் நன்றி கூறினார்.