கிருஷ்ணகிரி அணை அருகே செயல்படும் இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், போட்டோகிராபி மற்றும் விடியோகிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் சங்கர்கணேஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி அணையின் அருகே மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன் இந்தியன் வங்கியால் வேலைவாய்ப்பற்றவர்களுக்கு சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறது.
இங்கு அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். சுயஉதவிக் குழுக்கள், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் மதிய உணவு, தேநீர் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்படும்.
தற்போது, இந்த பயிற்சி நிறுவனத்தில் 30 நாள்களுக்கு போட்டோ மற்றும் விடியோகிராபி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் சேர்ந்து பயன்பெற விரும்புவோர், செப். 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான நேர்காணல் செப். 14-ஆம் தேதி நடைபெறும். 35 பயிற்சியாளர்கள் மட்டுமே இந்த பயிற்சியில் அனுமதிக்கப்படுவர்.
எனவே, சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-240500 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.