வேப்பனஅள்ளி அருகே வீர ராஜேந்திரனின் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்றை முறையாகப் பதிவு செய்யும் வகையில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய நிலையில், இந்தக் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன், வரலாற்று ஆசிரியர் ரவி உள்ளிட்ட குழுவினர் வேப்பனஅள்ளியை அடுத்த தம்மாண்டரஅள்ளி கிராமத்தில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு ஒரு கல்வெட்டைக் கண்டெடுத்தனர்.
அந்த கல்வெட்டைப் படியெடுத்த கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ், வியாழக்கிழமை தெரிவித்தது: நாம் கண்டறியும் கல்வெட்டுகள் அனைத்தும் வரலாற்றுக்கான புதிய வெளிச்சத்தைத் தருவதாகவே உள்ளன. இந்த கல்வெட்டும் அதற்கு ஏற்றார் போல உள்ளது. இதில், இரண்டு முக்கிய வரலாற்றுச் செய்திகள் உள்ளன.
முதலாவதாக, பூர்வாதராஜா என்ற குறுநில மன்னர்கள் பற்றியது. நமது மாவட்டத்தில், இவர்களைப் பற்றிய கல்வெட்டுகளே அதிகம். தற்போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் படி, முதன்முறையாக சோழர் ஆட்சிக் காலத்தில் பூர்வாத ராயரின் பெயர் பதியப்பட்டுள்ளது. இரண்டாவது, சோழ வம்சத்தில் வீர ராஜேந்திரன் என்ற பெயர் பற்றியது. வீர ராஜேந்திரனைத் தவிர்த்து மூன்றாம் குலோத்துங்கனும், இப் பெயரைச் சூட்டிக் கொண்டதாக சில கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இறுதியாக, மூன்றாம் ராஜேந்திரன் என்பவனும், வீர ராஜேந்திரன் எனக் குறிப்பிடப்படுவது, ஒரு கல்வெட்டு வாயிலாகத் தெரிகிறது.
இந்தக் கல்வெட்டில் காலத்தை மன்னரோடு ஒப்பிடும் வகையில், தமிழ் ஆண்டும், மன்னரின் ஆட்சி ஆண்டும் ஒருங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இவை இரண்டும் இந்த மூன்று அரசர்களோடும் ஒத்துப்போகவில்லை. மாறாக, மூன்றாம் ராஜராஜனின் ஆட்சியாண்டோடு ஒத்து வருவதால், இவருக்கும் வீர ராஜேந்திரன் என்ற பெயர் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அத்திமல்ல பூர்வாதராயன் கி.பி.1206-ஆம் ஆண்டு வாழ்ந்ததாக வேறு சில கல்வெட்டுகளின் வாயிலாகவும் தெரியவருவதால், இவனை மூன்றாம் ராஜராஜன் காலத்தவன் எனக் கொள்ளலாம்.
இதன் வாயிலாக, சோழர் வரலாற்றின் இறுதிக் கட்டத்தில் பூர்வாதராயர்கள் சோழர்களுக்கு கீழ் சில காலமும், பின்னர் தனித்தும் ஆண்டது உறுதிப்படுகிறது. மேலும், வீர ராஜேந்திரன் என மூன்றாம் ராஜராஜனும் அழைக்கப்பட்டிருக்கிறான் என்ற செய்தியும் இந்தக் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம்.
எனவே, சோழர்களின் இறுதிக் காலம் குறித்து மேலும் விரிவான ஆய்வுக்கு இந்தக் கல்வெட்டு அடித்தளம் இட்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வில், விஜயகுமார், மனோகரன், பிரகாஷ், கணேசன், டேவீஸ், காவேரி, மதிவாணன், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.