கிருஷ்ணகிரியில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கான நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவில், மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசியது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், மருத்துவம், தொழில்நுட்பக் கல்வியில் சேரும் வகையில் நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி, இம் மாவட்டத்தில் 10 மையங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 1,600 மாணவ, மாணவியர் பயிற்சி பெற உள்ளனர். இதற்காக, ஈரோட்டில் நடைபெற்ற கருத்தாளர் பயிற்சியில் 10 முதுநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்கள், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள 10 ஆசிரியர்கள் வீதம் 100 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில், மாணவ, மாணவியருக்கு சிறப்பான பயிற்சியும்,
ஊக்கமும் அளித்து மாணவர்களை நுழைவுத் தேர்வுக்கு தயார்ப்படுத்துவர் என்றார்.