கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 898 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதையடுத்து கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து சனிக்கிழமை காலை 7 மணியளவில் வினாடிக்கு 898 கன அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. இதையடுத்து, கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 724 கன அடி நீரும், வலது மற்றும் இடதுபுற பாசன கால்வாய் மூலம் வினாடிக்கு 174 கன அடி நீரும்
திறந்துவிடப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீர், நெடுங்கல் தடுப்பணை வழியாக, பாரூர் எரிக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி அணையின் நீர் வரத்து வினாடிக்கு 653 கன அடியாக இருந்தது. இத்தகைய நிலையில், அணையின் நீர்வரத்து குறையும் பட்சத்தில், அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் குறைக்கப்படும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.