சூளகிரி கோட்டை வாசலில் கடந்த 6 மாதங்களாக நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
சூளகிரி கோட்டை வாசல் தெரு, வாணியர் தெரு உள்ளிட்ட வடக்கு சூளகிரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் பல கிராமங்களில் ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், சூளகிரி நகரத்தில் மேட்டுத்தெரு, கோட்டை வாசல் தெரு, வாணியர் தெரு உள்ளிட்ட வடக்கு சூளகிரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீருக்காக மிகவும் போராடி
வருகின்றனர்.
இப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோயில், ஐயப்பன் கோயில், காசி விசுவநாதர் ஆலயம், ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக இப் பகுதியில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. ஒரு டிராக்டர் குடிநீரை ரூ.600 வரை விலை கொடுத்து வாங்கி இப் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்துக்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவுள்ளது.