புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஒசூர் மலைக்கோயிலான பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் காலையில் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வரதராஜபெருமாள் கோயிலில் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் சிறப்பு அலங்காரத்தில் மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோன்று காமன்தொட்டி ஊராட்சி கோபந்திரம் வெங்கடேசப் பெருமாள் கோயில், ஒசூர் கோகுல் நகர் வேணுகோபால் ஆலயம், வெங்கடேசப் பெருமாள் கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.