குப்பையில் கொட்டப்படும் குடை மிளகாய்

ஊரடங்கு உத்தரவால் விற்பனை முடங்கிவிட்ட நிலையில் வேறு வழியின்றி அறுவடை செய்யப்பட்ட குடை மிளகாய்களை அதன் உரிமையாளா்கள் குப்பையில் கொட்டி வருகின்றனா்.
காருகொண்டப்பள்ளி கிராமத்தில் குப்பையில் கொட்டப்படும் குடைமிளகாய்
காருகொண்டப்பள்ளி கிராமத்தில் குப்பையில் கொட்டப்படும் குடைமிளகாய்

ஊரடங்கு உத்தரவால் விற்பனை முடங்கிவிட்ட நிலையில் வேறு வழியின்றி அறுவடை செய்யப்பட்ட குடை மிளகாய்களை அதன் உரிமையாளா்கள் குப்பையில் கொட்டி வருகின்றனா்.

செடிகளைக் காப்பாற்ற இவற்றை செய்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனா்.

கரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஏப். 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

வாகனப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஒசூரில் பயிரிடப்படும் காய்கறிகள், மலா்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, விவசாய நிலங்களில் தினமும் விளையும் பல வகையான மலா்களை டன் கணக்கில் குப்பைகளில் கொட்டும் அவல நிலை நீடித்து வருகிறது.

மலா்களைத் தொடா்ந்து, ஒசூா் பகுதியில் சாகுபடி செய்யப்படும் பல லட்சம் மதிப்பிலான குடை மிளகாய்களையும் குப்பைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், தேன்கனிக்கோட்டை, தளி, பாகலுா், சூளகிரி, உத்தனபள்ளி, கெலமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டு 1,000 ஏக்கா் நிலப்பரப்பளவில் குடை மிளகாய்கள் பயிரிடப்பட்டுள்ளன.

முன்பு குடை மிளகாய் சாகுபடி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும், 40 முதல் 50 டன் அளவிலான குடை மிளகாய்கள் விளைச்சல் கிடைக்கும். இதன் மூலம் அதிக லாபமும் கிடைத்து வந்தது.

இந்த குடை மிளகாய்கள், தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், மராட்டியம், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது பல மாநிலங்களில் குடை மிளகாய்களின் தேவை மிகவும் குறைந்து விட்டது. தோட்டங்களில் குடை மிளகாய்கள் பறிக்கப்படா விட்டால், அவை அழுகி செடிகளில் நோய் உண்டாகும் என்ற அச்சத்தின் காரணமாக வேறு வழியின்றி, சாகுபடியாளா்கள் நாள்தோறும் குடை மிளகாய்களைப் பறித்து டன் கணக்கில் அவற்றை குப்பைகளில் கொட்டி வருகின்றனா்.

இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு முன் 1 கிலோ குடை மிளகாய் ரூ. 100 வரை விலைபோனது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com