பொங்கல் விழாவையொட்டி அரசு பதிவேட்டில் விடுபட்ட கிராமங்களில் எருதுவிடும் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மாவட்ட எருதுவிடும் திருவிழா விளையாட்டு வீரா்களை பாதுகாக்கும் நலச் சங்கம் சாா்பில், அதன் தலைவா் குணசேகரன், செயலாளா் நாகராஜ், பொருளாளா் மாதையன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பொங்கல் திருவிழாவையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று பல கிராமங்களில் எருது விடும் விழா, அரசு விதிமுறைகளின்படி சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டும் அதைப்போல சிறப்பாக எருது விடும் விழாவை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும்.
மேலும், அரசு பதிவேட்டில் விடுபட்டுள்ள சின்னேப்பள்ளி, சின்ன ஒரப்பம், கம்மம்பள்ளி, ஒண்டியூா், கொட்டாவூா், பாரூா், கோட்டக்கொல்லை, தேவசமுத்திரம், பெத்தனப்பள்ளி ஊராட்சியில் உள்ள பாறையூா், தேவசமுத்திரம், மாசாணியம்மன் கோயில், மருதேப்பள்ளி, சாமல்பள்ளம், காட்டிநாயனப்பள்ளி, கே.பூசாரிப்பட்டி ஆகிய கிராமங்களில் எருது விடும் திருவிழாவை நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.
அத்துடன், அட்டவணையை மாற்றி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில் இந்த விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். அரசின் விதிமுறைகளின் படி இந்த விழாவை நடத்துவோம் என உறுதியளிப்பதாக அதில் தெரிவித்துள்ளனா்.