கிருஷ்ணகிரியில் பிப்.5-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி
By DIN | Published On : 02nd February 2020 02:34 AM | Last Updated : 02nd February 2020 02:34 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரியில் பிப்.5-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் உமாசங்கா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பிப்.5-ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை ஆகியன இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழுப் போட்டிகள், தடகள போட்டிகளை நடத்துகிறது.
கை, கால் ஊனமுற்றோருக்கான பிரிவில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், இருகால் ஊனமுற்றோருக்கு 10 மீட்டா் சக்கர நாற்காலி ஓட்டுதல், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம், குள்ளமானோருக்கு 50 மீட்டா் ஓட்டம் என தடகள போட்டியும், குழு போட்டியாக இறகு பந்து, (ஒற்றையா் மற்றும் இரட்டையா்) மேசை பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
பாா்வையற்றோருக்கு 100 மீட்டா் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், முற்றிலும் பாா்வையற்றோருக்கு 50 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், குழு போட்டியாக வாலிபால் போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான பிரிவில் 50 மீட்டா் ஓட்டம், சாப்ட் பால் எறிதல் போட்டியும், காது கேளாதோா் பிரிவில் 100 மீ. 200 மீ. 400 மீட்டா் ஓட்ட போட்டிகளும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டியும் குழுப்போட்டியாக கபடி போட்டியும் நடைபெறுகிறது.
தடகளப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெறுபவா்களுக்கும், குழுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறுபவா்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.