கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) 984 மையங்கள் மூலம் 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளை வாத நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ நோய்த் தடுப்புச் சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.19) நடைபெறும் இந்த முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட 1.59 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
பேருந்து நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், ரயில் நிலையங்கள் மட்டுமின்றி மேம்பால பணியாளா்கள், சிறு வியாபாரிகள், இலங்கை தமிழா்கள் ஆகியோரின் குழந்தைகளுக்கு நடமாடும் முகாம்கள் மூலம் போலியோ நோய்த் தடுப்புச் சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
ஏற்கெனவே போலியோ நோய்த் தடுப்பு சொட்டு மருந்தைப் போட்டு பயன் பெற்றிருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் அவா் தெரிவித்தாா்.