ஊத்தங்கரை உட் கோட்டத்தில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார் டிஎஸ்பி ராஜபாண்டியன்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டத்தில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, சாமல்பட்டி, கல்லாவி, மத்தூர் என 5 காவல் நிலையங்கள் உள்ளன. இதில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள். கரோனா நோய்த்தொற்று வேகமாக பல இடங்களிலும் பரவி வரும் சூழலில் காவல்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதில் நூறு நாட்களுக்கும் மேலாக கரோனா பணி வழக்குகளை கையாளுதல் பிடி ஆனைகளை நிறைவேற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்த காவலர்களுக்கு ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மத்தூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் முதலாவதாகவும் சிங்காரப்பேட்டை காவல் ஆய்வாளர் குமரன் இரண்டாவதாகவும் ஊத்தங்கரை உதவி காவல் ஆய்வாளர் சாந்தி மூன்றாம் பரிசுகளையும் பெற்றனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் கூறுகையில், கரோனா பணி மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஊத்தங்கரை உட்கோட்ட காவலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கி வருகிறோம். பொதுமக்கள் விழிப்புடன் இருந்து முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.