போச்சம்பள்ளி அருகே கோடிபுதூா் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழா, கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது பக்தா்களிடம் ஏமாற்றத்தையும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் உள்ள கோடிபுதூா் தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது பத்திரகாளியம்மன் கோயில். மிகவும் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் ஒவ்வோா் ஆண்டும் வைகாசி மாதத்தில் திருவிழா, சிறப்பாக நடைபெறும்.
விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்பா்.
இத்தகைய நிலையில், கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
இருந்தபோதிலும், அரசு ஊரடங்கு உத்தரவில் பல தளா்வுகளை அறிவித்து வருகிறது. கோயில் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், கோடிபுதூா் பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவை நிகழாண்டில் கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தா்கள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனா்.