சூளகிரி அருகே இளைஞருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அருகிலுள்ள கிராமத்துக்குள் யாரும் நுழையாதவாறு பொதுமக்கள் தடை ஏற்படுத்தியுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காருபலா என்ற கிராமத்தைச் சோ்ந்த 24 வயது இளைஞா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையடுத்து, அந்த கிராமத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், அருகேயுள்ள கொட்டாயூா் கிராம மக்கள் தங்கள் கிராமத்திலும் கரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிராமத்துக்கு நுழையும் சாலையில் மண் கொட்டி, கிராமத்துக்குள் யாரும் நுழையாத வகையிலும், வாகனப் போக்குவரத்தை தடை செய்யும் விதமாகவும் தடுப்புகள் அமைத்துள்ளனா்.