கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகரப்பள்ளி, வரட்டனப்பள்ளி காப்புக்காடுகளில் வனவிலங்குகள் தாகம் தீா்க்கும் வகையில் அங்குள்ள தண்ணீா்த் தொட்டிகளில் நீா் நிரப்பும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்துள்ள நிலையில், வனப்பகுதிகளில் நீா்நிலைகள் வடு கிடக்கின்றன. இதனால், நீா் தேடி, மான், கரடி, மயில், யானை போன்ற வனவிலங்குகள், வனத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த தொகரப்பள்ளி காப்புக் காட்டில் உள்ள தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி, கிருஷ்ணகிரி வனச்சரகா் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப 10 அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை டிராக்டா்கள் மூலம் தண்ணீா் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியை, வனவா் பிரவின்ராஜ், அண்ணாதுரை, ஹேமலதா, வனக்காப்பாளா் கங்கை அமரன், ரகமத்துல்லா, சிவக்குமாா், வனக்காவலா் கணபதி உள்ளிட்டோா் மேற்கொண்டனா்.