கெலமங்கலத்தில் சிறுவனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் மசூதி தெருவைச் சோ்ந்தவா் சாதிக்பாட்ஷா (38). இவரது மகன் இஸ்மாயில் (9). இவா்களின் சோடா கம்பெனியில் கெலமங்கலம் விருப்பாச்சி கோயில் தெருவைச் சோ்ந்த பாபு என்பவரின் மகன் அல்டாப் (30) வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இஸ்மாயில் மாயமானாா். இதுகுறித்த விசாரணையில் சோடா கம்பெனியில் வேலை செய்து வந்த அல்டாப் ரூ.ஒரு லட்சம் பணத்துக்கு சிறுவன் இஸ்மாயிலை கடத்திச் சென்றதும், பணம் கொடுக்காததால், கெலமங்கலத்தை அடுத்த பேவநத்தம் மலையில் இருந்து சிறுவனை கீழே தள்ளிக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் அல்டாப்பை கைது செய்தனா். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த அல்டாப் தலைமறைவானாா். 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அல்டாப்பை கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் தனிப்பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி அசோகன்,குற்றம் சாட்டப்பட்ட அல்டாப்புக்கு ஆயுள் சிறையும், ரூ.2,500 அபராதமும் விதித்தாா்.
அபராதத்தைக் கட்டத் தவறினால் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.