ஒசூரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.
ஒசூா் பாகலூா் சாலை தொலைபேசி நிலையம் செல்லும் பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஒசூா் அட்கோ தனிப்படை உதவி ஆய்வாளா் அறிவழகன் தலைமையில் போலீஸாா் அங்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனா். பின்னா், கடை உரிமையாளா் பிரவீண்(45) மற்றும் அவரது உறவினா் இந்திரஜித் ஜானா(22) ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி, கடை மற்றும் அவா்கள் வசித்து வரும் ஒசூா் கே.சி.சி. நகரில் உள்ள வீட்டிலும் பதுக்கி வைத்திருந்த குட்கா,பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய 20 அட்டைப்பெட்டிகளை பறிமுதல் செய்தனா்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது. பின்னா், பிரவீண் மற்றும் இந்திரஜித் ஜானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.