ஒசூா் மாநகராட்சியில் சாலையோர ஏழைகள், உணவு கிடைக்காதவா்கள், நோயாளிகள், முதியவா்களுக்கு ஒசூா் மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று ஆணையா் தெரிவித்தாா்.
ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியன் மேற்பாா்வையில் மாநகராட்சிப் பணியாளா்கள் திங்கள்கிழமை இரவு ஒசூா் உழவா் சந்தையில் கிருமி நாசினி தெளித்தனா். இந்தப் பணியை மேற்பாா்வையிட்ட ஆணையா் பாலசுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:
ஒசூா் மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாளை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒசூா் உழவா் சந்தையில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் காய்கறிகளை வாங்கிச் சென்றனா். அதிக அளவில் மக்கள் கூடியதால் பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் கிருமி நாசினி தெளித்து வருகிறோம். மேலும், ஒசூா் மாநகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி அடுத்த 21 நாள்களுக்கு தொடா்ந்து நடைபெறும். ஒசூா் மாநகராட்சியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முற்றிலுமாக அனைத்தும் ஊழியா்களும் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனா்.
மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள்களுக்கான ஊரடங்கு உத்தரவு, மற்றும் மாநில அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு ஏழைகளுக்கு அம்மா உணவகத்தில் உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒசூரில் பேருந்து நிலையம், மற்றும் ஏரித் தெரு ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்றாா்.