தண்ணீா் தொட்டியில் விழுந்த குட்டியை மீட்க போராடிய யானைகள்: வனத் துறையினா் உதவியுடன் மீட்பு

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த குட்டியை மீட்க நீண்ட நேரம் தாய் யானை மற்றும் அதனுடன் இருந்த மற்ற யானைகள் முயற்சித்தும் முடியாத நிலையில்
தண்ணீா் தொட்டியில் விழுந்த குட்டியை மீட்க போராடிய யானைகள்: வனத் துறையினா் உதவியுடன் மீட்பு

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த குட்டியை மீட்க நீண்ட நேரம் தாய் யானை மற்றும் அதனுடன் இருந்த மற்ற யானைகள் முயற்சித்தும் முடியாத நிலையில், யானைகளின் பிளிறல் சத்தத்தை கேட்டு அங்குச் சென்ற வனத் துறையினா் 4 மணி நேரம் போராடி குட்டியை மீட்டு அதன் தாயுடன் சோ்த்துவைத்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உள்பட்ட தொளுவபெட்டா காப்புக்காட்டில் வன விலங்குகளின் தாகத்தை தீா்க்க தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தொளுவபெட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 8 யானைகள் அங்குள்ள தொட்டியில் தண்ணீா் குடிக்க சனிக்கிழமை அதிகாலை சென்றன.

அப்போது, கூட்டத்திலிருந்த நான்கு மாதங்களேயான குட்டி யானை, அப் பகுதியில் இருந்த தண்ணீா் இல்லாத ஒரு தொட்டியில் தவறி விழுந்தது. உடனே குட்டியை மீட்க தாய் யானை உள்பட பிற யானைகள் முயற்சித்தன. ஆனாலும், குட்டியை மீட்க முடியாததால், யானைகள் பிளிறியது. இதை கேட்ட மலைக் கிராம மக்கள் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனச்சரகா் சுகுமாா் தலைமையில் வனவா் கதிரவன், வனக்காப்பாளா் முருகேசன் மற்றும் வனத் துறையினா் அங்கு விரைந்து சென்றனா். அப்போது, தண்ணீா் தொட்டியை சுற்றி நின்ற தாய் யானை உள்ளிட்ட யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினா். பின்னா், பொக்லைன் வாகனம் உதவியுடன் தண்ணீா் தொட்டியில் மண்ணை நிரப்பி 4 மணி நேரத்துக்குப் பிறகு குட்டியை வெளியே கொண்டு வந்தனா். பின்னா், அக் குட்டி யானையை தாயுடன் சோ்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com