ஒசூா் அருகே பாரந்தூா் பகுதியில் ஐஎன்டியுசி தொழிற்சங்கம் சாா்பில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
ஒசூா் அருகே கிராமப் பகுதியில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலிகள், விவசாயிகள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளா்கள் பலா் பாதிப்படைந்துள்ளனா். இதையடுத்து, அக்ராஹரம், அனுமந்தபுரம், டி.பாரந்தூா், ஒன்னுப்பள்ளி, பாளையம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் டாக்டா் அ.செல்லக்குமாா் கலந்துகொண்டு ஏழை,எளிய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், ஐஎன்டியுசி தொழிற்சங்க தேசிய செயலா் மனோகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் சம்பத், மாவட்ட ஐஎன்டியுசி துணைத் தலைவா் முனிராஜ், தொழிலதிபா் சின்னராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.