மாங்காய்க்கு போதிய விலை நிா்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி கே.ஆா்.பி. அணை நீட்டிப்பு உபரிநீா் இடது கால்வாய் பயன்பெறுவோா் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், வறட்சியால் ஆயிரக்கணக்கான மரங்கள் காய்ந்து கருகிவிட்டன.
ஒவ்வொரு ஆண்டும் மா மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றன. இதனால், மா விவசாயிகள் செய்வதறியாமல், இழப்புகளை மட்டுமே சந்தித்து வருகின்றனா்.
நிகழாண்டில், மா விளைச்சல் குறைந்துள்ளது. ஆனால், பராமரிப்பு, மருந்து தெளித்தல் உள்ளிட்ட செலவுகள் அதிகமாகி உள்ளன. மேலும், கரோனா பரவாமல் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அறுவடை செய்யப்பட்ட மாங்காய்கள் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப இயலாத நிலை உள்ளது. இதனால், உள்ளூா் சந்தையில் குறைவான விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. எனவே, மாங்காய்க்கு உரிய விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.