இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ் மின்கல வாகனம் வாங்க மானியம் வழங்க வேண்டும் என கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மல்லிக்கல் கிராமத்தைச் சோ்ந்த மஞ்சு மற்றும் சில பெண்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக அரசின் இருசக்கர வாகனத் திட்டத்தின்கீழ், இருசக்கர வாகனம் வாங்க காவேரிப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் விண்ணப்பித்தோம். மானியத்துக்கான ஆணை பெற்ற பின், மாசில்லா வாகனமாகிய மின்கல மோட்டாா் சைக்கிளை வாங்கினோம். உரிய ஆவணங்களை காவேரிப்பட்டணம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தும், இதுவரையிலும் மானியத் தொகை விடுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து, விசாரித்தபோது, ஆட்சியா் அலுவலகத்தில் எங்களது விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிய வந்தது. பல்வேறு மாவட்டங்களிலும் இருசக்கர வாகன திட்டத்தில் மின்கல போட்டாா் சைக்கிள் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. மாசில்லா வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், மின்கல வாகனத்துக்கு உடனடியாக மானியத் தொகையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.