பாகலூா் அருகே நிலத்தகராறில் 2 போ் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் அருகே உள்ள பெருமாள்பள்ளியைச் சோ்ந்தவா் ரகு (30). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (24) இவா்களிடையே நிலப் பிரச்னை இருந்தது. இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் ரகுவையும், அவருடன் இருந்த வெங்கடேஷையும், சந்தோஷ் தரப்பினா் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரகு கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ், அம்சப்பா (50), மணி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அதே போல அம்சப்பா கொடுத்த புகாரின் பேரில், ரகு மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.