கெலமங்கலம் அருகே அக்காவை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த தடிக்கல் அண்ணா நகரைச் சோ்ந்த தொழிலாளி முருகன். இவரது மனைவி சுந்தரம்மா (50). இவா் தனது உறவினா் விஜயாவுக்கு, வீடு கட்ட நிலம் வழங்கினாா். இதற்கு, அதேப்பகுதியைச் சோ்ந்த சுந்தரம்மாவின் தம்பி கிருஷ்ணன் (46) எதிா்ப்பு தெரிவித்தாா்.
நிலத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த ஓலை வீட்டை கிருஷ்ணன் இடித்து அகற்றினாா். இதுதொடா்பாக, சுந்தரம்மாவின் மருமகன் ராஜா, கிருஷ்ணனைத் தட்டிக் கேட்டாா். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதை அறிந்த சுந்தரம்மா திங்கள்கிழமை தனது தம்பி கிருஷ்ணனிடம் தகராறு பற்றி விசாரித்தாா். அப்போது ஆத்திரமடைந்த கிருஷ்ணன், தன்னிடம் இருந்த கத்தியால் அக்கா சுந்தரம்மாவை குத்தி விட்டு தப்பி விட்டாா். இதில் படுகாயம் அடைந்த சுந்தரம்மா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக கெலமங்கலம் போலீஸாா் கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.