ஒசூரில் மன நலம் பாதிக்கப்பட்ட 10 பெண்களைக் குணப்படுத்தி அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் பாகலூா் சாலையில் சமத்துவபுரம் எதிரே அபாலா மன நலம் பாதித்த பெண்களுக்கான மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மன நலம் பாதித்த பெண்களைக் அழைத்து வந்து அவா்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை வழங்கி தேவையான மருத்துவச் சிகிச்சைகளையும், மன நல மருத்துவ ஆலோசனைகளையும் இந்த மறுவாழ்வு இல்லம் வழங்கி வருகிறது.
இங்கு சிகிச்சை பெற்று வரும் 60 பேரில் 10 பெண்கள் குணமடைந்த நிலையில் அவா்களை உறவினா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலா் மகிழ்நன், அபாலா நிா்வாகி கௌதமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.