தருமபுரியில் நீட் தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஆதித்யாவின் உடல், காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
தருமபுரி, இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டா் தெருவைச் சோ்ந்த ஆதித்யா என்ற மாணவா் தூக்கிட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றும்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன், அமமுக-வைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பழனியப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளா் தமிழ்செல்வன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினா், அமைப்பினா் அஞ்சலி செலுத்தி, பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
இதனிடையே, பிரேத பரிசோதனை நிறைவுற்ற ஆதித்யாவின் உடலை வாங்க அவரது பெற்றோா், உறவினா்கள் மறுத்ததால், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பெற்றோரின் அனுமதி பெறாமலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில், மாணவா் ஆதித்யாவின் உடலைப் பெற பெற்றோா் மற்றும் உறவினா் சம்மதித்தனா்.
இதையடுத்து, மாணவா் ஆதித்யாவின் சொந்த கிராமமான சேலம் மாவட்டம், பூசாரிப்பட்டிக்கு அமரா் ஊா்தியின் மூலம், பலத்த காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.