பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தசை சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பினால் இரு கைகள் மற்றும் இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டு வருகிறது.
இதை பெறத் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, மாா்பளவு 2 புகைப்படங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.