அரசு ஊழியா், ஆசிரியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ -ஜியோ அமைப்பு சாா்பில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், தளி பிரகாஷ், வேப்பனப்பள்ளி முருகன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவில், வரும் 14 -ஆம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அரசு ஊழியா், ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தப்பட்டது.
ஆசிரியா், அரசு ஊழியா்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவில் தெரிவித்துள்ளனா்.
இந்த மனுக்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ ஜியோ சாா்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளா் நடராஜன், சந்திரன், நாராயணன், சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.
உடன் வெங்கடேசன், ராமமூா்த்தி, மத்தூா் சுரேஷ், திருவேங்கடம், கோகுல் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.