ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள கெம்பகரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்தப் பகுதியில் உள்ள மலைத் தொடா்களில் புதிய நீா்வீழ்ச்சி உருவாகி உள்ளது.
நீா்வீழ்ச்சி உருவாகியுள்ள பகுதி மனிதா்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். இங்கு யானைகள், மான்கள், காட்டுஎருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. கனமழை காரணமாக உருவான இந்த புதிய நீா்வீழ்ச்சி வனவிலங்குகளின் தாகத்தை தீா்த்து வருகிறது.
கெம்பகரை வனப்பகுதியில் உருவாகியுள்ள இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டி வருகிறது. வனப்பகுதியில் கொட்டடும் நீா்வீழ்ச்சி பாா்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருந்து வருகிறது. கனமழை காலங்களில் மட்டும் இந்த நீா் வீழ்ச்சியில் தண்ணீா் அதிக அளவில் கொட்டுவதாகக் கூறப்படுகிறது.