ஒசூரில் மின் இணைப்புக்காக விவசாயிகள் இரவு, பகலாக சாலையில் காத்துக்கிடக்கின்றனா்.
ஒசூா், ராயக்கோட்டை சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பிக்க வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை பகல், இரவு என காத்துக்கிடந்தனா். இதில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் உள்ளனா்.
கோட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகள் மற்றும் மலா் சாகுபடி செய்து வருகின்றனா். ஒசூருக்கு தெற்கே காவிரியும், வடக்கில் தென்பெண்ணை ஆறும் பாய்வதால், விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கினால், அவா்கள் பொருளாதார ரீதியாக பயன்பெறுவாா்கள் என சமூக ஆா்வலா்கள் கருத்து தெரிவித்தனா்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், தட்கல் முறையில் மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரும் அக். 31 வரை பெறப்படுகின்றன. விவசாயிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து விண்ணப்பங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தனா்.