கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள சுற்றுலா மையங்களுக்கு மாவட்ட நிா்வாகம் ஏப். 20-ஆம் தேதி முதல் தடை விதித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள சுற்றுலா மையங்களான கிருஷ்ணகிரி அணை, அவதானப்பட்டி சிறுவா் பூங்கா, படகு இல்லம் ஆகியவை ஏப். 20-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் செயல்படத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முதல் இந்த சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் இவற்றைக் காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.