ஒசூா் மாநகராட்சியில் 63 மையங்களில் போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போலியோ சொட்டு மருந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு சத்துணவு மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவிடாமல் வழங்கப்பட்டது.
வேப்பனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.முருகன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடக்கி வைத்தாா். ஒசூா் பேருந்து நிலையத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஏ.சத்யா குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றி தொடக்கி வைத்தாா்.
ஒசூா் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி ஆணையாளா் செந்தில்முருகன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தாா். தளி தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினாா்.