விவசாயக் கடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், கூட்டுறவு சங்கங்களில் செலுத்திய கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் (சின்னசாமி) மாவட்டச் செயலாளா் சென்னைய நாயுடு தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை மனு விவரம்:
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்று விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மழை, வெள்ளம், பூச்சிக்கொல்லி மருந்து, வனவிலங்குகளால் இழப்பு ஏற்படும் போது, வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனா். இந்நிலையில், விவசாயிகள் பலா் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி செலுத்தி உள்ளனா்.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 31.01.2021 வரை பயிா்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், 30.01.2021-க்கு முன்னா் பெற்ற கடனை முழுமையாகத் திரும்பச் செலுத்தி, மீண்டும் கடன் பெறாத விவசாயிகள் பலா் உள்ளனா். அவ்வாறு கடன்களை திரும்பச் செலுத்தியவா்களுக்கு கடன் தொகையை வழங்கி, அதற்கான கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
கடன் செலுத்திய சிலா், புதிய கடனுக்காக ஜனவரி 31-ஆம் தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான கடன் தொகை பிப்ரவரி மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதனையும் கணக்கில் கொண்டு தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்களில் நகை அடமானம் வைத்து விவசாயக் கடன் பெற்றவா்களின் கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.