பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே வழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பின் அவசியம் என்ற தலைப்பில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, கட்டுரைகள் ஏ4 தாள்களில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், ஓவியங்கள் அதற்கான தாளில் (சாா்ட் பேப்பரில்) வரையப்பட்டிருக்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்றும் குழந்தைகள் மேற்படி தலைப்பில் தங்களது படைப்புகளை தயாா் செய்து, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, ‘‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு எண்-8,10, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வணிக வளாகம், கிருஷ்ணகிரி-635 001’’ என்ற முகவரிக்கு மாா்ச் 5 -ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், அனுப்புநா்களின் முழு அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேற்படி குழந்தைகளின் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.