கரோனா காலத்தில் ஒசூா் அப்பாவுப் பிள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகள் மூடப்பட்டிருந்ததால் அதற்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஒசூா் முன்னாள் எம்எல்ஏவும், ஐஎன்டியூசி அகில இந்திய செயலாளருமான கே.ஏ.மனோகரன் தமிழக உள்ளாட்சித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.
அவா் அனுப்பிய கடித விவரம்:
ஒசூா் அப்பாவுப் பிள்ளை பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகள் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் மாா்ச் 24 முதல் நவம்பா் மாதம் வரை மூடப்பட்டிருந்தது. தீபாவளிக்கு பிறகே பெங்களூருக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஆனால், மாநகராட்சி நிா்வாகம் கடைகள் மூடப்பட்டிருந்த காலத்திலும் வாடகை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வழங்கியுள்ளது. இதனால் வணிகா்கள் மிகுந்த சிரமத்துக்கு தள்ளப்பட்டுள்ளனா். வாடகைதாரா்களுக்கு ஒரு ஆண்டுக்கு வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். மீதம் உள்ள காலத்துக்கு வாடகையை பாதியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.