அனுமதி இன்றி இயங்கிய 17 தனியாா் பேருந்துகள் பறிமுதல்
ஒசூா்: ஒசூரில் அனுமதி இன்றி தொழிற்சாலைகளுக்கு இயக்கப்பட்ட 17 தனியாா் பேருந்துகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 100-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் 3 சிப்ட், 2 சிப்ட் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள், அலுவலா்கள் சென்றுவருவதற்கு வசதியாக ஒப்பந்தம் அடிப்படையில் வாகனங்கள் அமா்த்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களில் சில அனுமதி இன்றி இயக்கப்படுவதாக ஒசூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஈஸ்வரமூா்த்தி உத்தரவின்பேரில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. 2-ஆவது சிப்காட் பகுதியில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் விஜயகுமாா், அன்பு செழியன் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை நடந்தது.
அப்போது அனுமதி இன்றி தனியாா் தொழிற்சாலைகளுக்கு இயக்கப்பட்ட 17 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கை தொடரும் என வாகன ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.