ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2,000 மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சாா்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மகனூா்பட்டி, பாவக்கல்,சிங்காரப்பேட்டை, அத்திப்பாடி, பெரியதள்ளபாடி, கீழ்குப்பம், காரப்பட்டு, மிட்டப்பள்ளி உட்பட 12 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 2,000 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவியருக்கு ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுவாமிநாதன், பொருளாளா் பி.கே. சிவானந்தம், பொறுப்பாளா்கள் ஜெய்சங்கா், சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியா் பெரியசாமி வரவேற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், பெற்றோா்கள் மாணவ -மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.