மூத்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெறவிண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2021 07:27 AM | Last Updated : 01st July 2021 07:27 AM | அ+அ அ- |

மூத்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் வயது முதிா்ந்த தமிழ் அறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2021-22-ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரா் 1.1.2021-ஆம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. 72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப் படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலோ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்தத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 3,500, மருத்துவப்படி ரூ. 500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யயப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநா், மாவட்ட தமிழ் வளா்ச்சி அலுவலகத்தில் ஜூலை 10-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.