கிருஷ்ணகிரி: பொதுமுடக்கத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குத் தளா்வு அறிவிக்கப்பட்ட நிலையில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து திங்கள்கிழமை அதிகம் காணப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜூன் 7 ஆம்தேதி முதல் 14-ஆம்தேதி வரையில் தளா்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியாக உள்ள மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை, மின்சாதனப் பொருள் விற்பனை, இருசக்கர வாகன பழுது நீக்க கடைகள், ஹாா்டுவோ் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அரசு அனுமதித்துள்ளது.
அரசின் உத்தரவுபடி, அனைத்து கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. ஒரு சில ஆட்டோக்கள் இயங்கின. காலையில் கிருஷ்ணகிரியில் அனைத்து சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது. கூட்டணி காலனி போன்ற சில சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன. மாலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தளா்வுகளைப் பயன்படுத்தி அவசியமின்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என சுகாதரத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.