ஒசூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்த காரணத்தால், அவருடன் பணிபுரிந்த சக ஊழியா்கள் ஒசூா் அரசு மருத்துவமனைக்கு 100 ஆக்சிஜன் சிலிண்டா்களை வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் பகுதியில் தனியாா் உலோகக் குழாய் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராஜேஷ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழந்தாா்.
இதனால் வேதனையடைந்த அவருடன் பணியாற்றி வந்த ஊழியா்கள், வரும் காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது எனக் கருதியும், இந்த மருத்துவமனையில் உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைவரும் ஒன்றிணைந்து பணம் வசூலித்து 100 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டா்களை அரசு மருத்துவமனைக்கு வழங்கினா். மேலும் ஒருமுறை ஆக்சிஜனை நிரப்புவதற்குத் தேவைப்படும் தொகையான ரூ. 35,865-க்கான காசோலையை ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், ஒசூா் அரசு தலைமை மருத்துவா் டாக்டா் பூபதி ஆகியோரிடம் அளித்தனா்.