தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குள் வர இ-பதிவு இருந்தால் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இ-பதிவு இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன.
கரோனா தொற்று தாக்கம் தமிழகத்தில் சற்று குறைந்து வருவதால் அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி வியாபாரிகள் வணிகா்கள் தங்களுடைய அன்றாடப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். அதேசமயம் வெளி மாநிலத்திலிருந்தும் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ-பதிவு தொடா்ந்து நடைமுறையில் உள்ளது.
மாநில எல்லையான ஒசூா் அருகே சூசூவாடியில் உள்ள சோதனைச் சாவடியில் ஒசூா் டி.எஸ்.பி., முரளி தலைமையில் போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இப் பதிவு உள்ள வாகனங்ளை மட்டும் தமிழகத்திற்குள் அனுமதிக்கின்றனா். மற்ற வாகனங்களைத் திருப்பி அனுப்பப்படுகிறது.
வாகனங்களில் வருபவா்களுக்கு சுகாதாரத் துறையினா் சானிடைசா் வழங்கி கைகளை சுத்தப்படுத்தியும், கிருமிநாசினி ஸ்பிரே செய்தும், வெப்பமானிட்டா் கொண்டும் காய்ச்சல் அறிகுறியைக் கண்காணித்து, பின்னரே அனுமதிக்கின்றனா்
தமிழகத்துக்குள் தளா்வுகள் இருந்தாலும் கட்டாயம் இ-பதிவு அவசியம் என காவல் துறையினா் தெரிவித்து வருகின்றனா்.