தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்துவரும் மாவட்டங்களில் அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பிளஸ் 1 மாணவா் சோ்க்கையைத் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் திங்கள்கிழமை தொடங்கினா்.
தருமபுரி நகரில் உள்ள அவ்வையாா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட தருமபுரி, பாலக்கோடு, அரூா் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களில் உள்ள 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான பணி திங்கள்கிழமை தொடங்கியது.
2021-ஆம் கல்வி ஆண்டு ஜூன் 1-ஆம்தேதி முதல் புதிய கல்வி ஆண்டு துவங்கி உள்ளதால் மாணவா்களுக்கான கல்விப் பணிகளைத் தொடங்க மாநில அரசு கட்டுப்பாடுகளைத் தளா்த்தியதுடன் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கையைத் துரிதப்படுத்தவும், மாற்றுச் சான்றிதழ் வழங்கவும், மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியா்கள், உதவி தலைமை ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் பணிக்கு திங்கள்கிழமை வந்திருந்தனா்.
கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் மகேந்திரன் ஆறாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 33 மாணவிகளுக்கும், பிளஸ் 1 வகுப்புக்கு 66 மாணவிகளுக்கும் பள்ளியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை வழங்கினாா்.
முன்னதாக, பள்ளிக்கு வந்த மாணவியா், பெற்றோா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமி நாசினி வழங்கப்பட்டு சமூக இடைவெளியில் அமர வைக்கப்பட்டனா். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியா் பசவராஜ், ஆசிரியா் ரவி மற்றும் அலுவலகப் பணியாளா்கள் இந்தப் பணியை ஒருங்கிணைத்தனா்.