ஒசூா் அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டா், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடுதல் படுக்கைகள், மருத்துவா்கள், செவிலியா்களை நியமிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒசூரில் 30-க்கும் மேற்பட்ட பெரிய தொழிற்சாலைகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் சுமாா் 1.5 லட்சம் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். ஒசூா் மாநகராட்சியில் 5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் 30 மருத்துவா்கள், குறைந்த எண்ணிக்கையில் செவிலியா்கள் உள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவலால், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக வருகின்றனா்.
ஒசூா் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கூடுதல் படுக்கை வசதிகள் தேவைப்படுகின்றன. ஒசூா் அரசு மருத்துவமனையில் ரூ. 10 கோடி மதிப்பில் 100 படுக்கைகள் கொண்டு கூடுதல் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கட்டடத்தை விரைந்து முடித்து, கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்த புதிய கட்டடத்தில் வெண்டிலேட்டா், ஆக்சிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கைகளை அமைக்க வேண்டும் என முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், ஐஎன்டியுசி அகில இந்திய செயலாளருமான கே.ஏ.மனோகரன் வலியுறுத்தியுள்ளாா்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ஜெயசந்திரபானு ரெட்டி மருத்துவமனை கட்டும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.