தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கையெழுத்திட்டாா். இதற்கு ஒசூரில் தொழிற் சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் மகளிா் வரவேற்பு தெரிவித்து, பேருந்துகளில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.
திமுக தோ்தல் வாக்குறுதியை செயலாக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம்
செய்யும் பணிபுரியும் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவியா் உள்ளிட்ட
அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் சனிக்கிழமை முதல் பயணம் செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளாா். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ. 1,200 கோடியை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும் என தெரிவித்துள்ளாா்.
முதல்வரின் இந்த அறிவிப்பினால் ஒசூரில் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லும் மகளிா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். குறிப்பாக ஒசூரில் இயங்கி வரும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு கிராமங்களில் இருந்து பெண்கள் அதிக அளவில் வேலைக்கு வருகின்றனா். அவா்கள் தினமும் நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக ஒசூா் தொழிற்சாலைகளுக்கு பாகலூா், பேரிகை, கெலமங்கலம், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி, பேளகொண்டப்பள்ளி, அஞ்செட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வேலைக்கு வருகின்றனா்.
இவா்களின் சம்பளத்தில் பெரும் பகுதி பேருந்து பயணத்திற்கே செலவானது. தற்போது தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகளிா் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளதை பெண்கள் வரவேற்றுள்ளனா்.