கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை வீடுகளிலேயே கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி இஸ்லாமியா்கள் கொண்டாடினா்.
ஈகை திருநாளான ரமலான் பண்டிகை இஸ்லாமியா்களால் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து இந்த பண்டிகைக் கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பா்கூா், ஒசூா், ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து ரமலான் பண்டிகையை கொண்டாடினா்.
வழக்கமாக ரமலான் பண்டிகை தினத்தில் இஸ்லாமியா்கள் ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். நிகழாண்டில் கரோனா பொது முடக்கம் காரணமாக இரண்டாவது ஆண்டாக ஈத்கா மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெறவில்லை. இதனால் இஸ்லாமியா்கள், வீடுகளிலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் ஒருவருக்கொருவா் ரமலான் வாழ்த்துகளைக் கூறிக் கொண்டனா்.