கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் இடுபொருள் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24-ஆம் தேதி முதல் தளா்வில்லாத பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு இடுபொருள்கள் பெறுவதில் சிரமம் இருப்பதாக கோரிக்கை வந்துள்ளது. மேலும், மாநில அளவில் சென்னை வேளாண் இயக்குநா், விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிமருந்துகள் விநியோகம் செய்ய அனுமதி வழங்கியுள்ளாா்.
இதனைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிமருந்து விற்பனை நிலையங்கள் காலை 6 முதல் காலை 10 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், விற்பனை சமயத்தில் கரோனா தொற்று பரவாதபடி, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.