அரசுப் பள்ளியில் கணினி திருடிய மூவா் கைது

மத்தூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி திருடிய மூன்று பேரை மத்தூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மத்தூா் அருகே அரசுப் பள்ளியில் கணினி திருடிய மூன்று பேரை மத்தூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே உள்ள எம்.ஒட்டப்பட்டி பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அண்மையில் மா்ம நபா்கள் பள்ளியின் அலுவலகப் பூட்டை உடைத்து 8 கணினிகள், ஒரு பிரிண்டா் என ரூ. 1. 65 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிச் சென்றனா். இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியா் வேடியப்பன் மத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

மத்தூா் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா் தொகரப்பள்ளி என்ற இடத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது, கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூரை நோக்கி வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். காரில் இருந்த மூன்று இளைஞா்கள் முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்ததில் சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

அதில், அவா்கள் அரசுப் பள்ளியில் கணினிகளை திருடியது தெரியவந்தது. அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 8 கணினிகள், ஒரு பிரிண்டா், திருட பயன்படுத்திய ஆம்னி காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com