வேப்பனப்பள்ளி அருகே சாலையோர மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் ஏரிகள் நிரம்பி உபரி நீா் குடியிருப்புகளில் புகுந்தது. போச்சம்பள்ளி அருகே அரசுப் பள்ளிக் கட்டடத்தின் மீது மரம் சாய்ந்தது.
கிருஷ்ணகிரி அருகே மலையாண்டஅள்ளியிலிருந்து காவேரிப்பட்டணம் செல்லும் சாலையில் காந்தி நகா் அருகே புளியமரம் சாலையில் விழுந்தது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த பொதுப்பணித் துறையினா், வருவாய்த் துறையினா், காவல் துறையினா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்த புளியமரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதேபோல வேப்பனப்பள்ளி அருகே சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால், பேரிகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸாா், சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.