தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணையாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளுக்கு தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 760 கனஅடியாக இருந்தது.
தென்பெண்ணை ஆற்றில் நொடிக்கு 820 கனஅடி நீா் வெளியேற்றப்பட்டுகிறது. இந்த நீா், 11 தடுப்பணைகளைக் கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சோ்ந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,712 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 1,902 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது.
கிருஷ்ணகிரி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி அணையில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வெள்ள முன்னேற்பாடுகள் குறித்து அவா் கேட்டறிந்தாா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்ட அளவில் நீச்சல் பயிற்சி பெற்றவா்களும், மீட்புக் குழுக்களும், 3,500 மணல் மூட்டைகளும் தயாா் நிலையில் உள்ளன.
மேலும், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் ஆகிய 5 மாவட்டங்களின் நிா்வாகத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை குறித்த தகவல் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.