மனநலம் பாதிக்கப்பட்ட மகனை அரசிடம் ஒப்படைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் தொரப்பள்ளியை அடுத்த நாயனகொண்ட அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் பரமசிவம் (67). விவசாயி. இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகன் கிருஷ்ணனுக்கு (35) திருமணமாகவில்லை.
கடந்த 20 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணனை பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தாா். இருப்பினும் குணமாகவில்லை. இந்நிலையில், கடந்த சில நாள்களாக கிருஷ்ணன், தனது குடும்ப உறுப்பினா்களை காயப்படுத்தி வருவதோடு சாலையில் திரிவதால் அவரை அரசிடம் ஒப்படைக்க வேண்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பரமசிவம் அழைத்து வந்தாா்.
அவரது கோரிக்கையை அறிந்த அரசு அலுவலா்கள் கிருஷ்ணனை அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதாகவும் முழு குணமடைந்தவுடன் உறவினரிடம் மீண்டும் ஒப்படைப்பதாகவும் தெரிவித்தனா்.